சனி, 6 பிப்ரவரி, 2016

தலீத் இலக்கியமும் - அழகிய பெரியவனும்



தலீத் இலக்கியம் என்றால் என்ன?

            தலீத் இலக்கியம் என்றால், ஒரு குறிப்பிட்ட ஜாதி, இனத்தைப் பற்றி அந்த இனத்தாரால் எழுதப்படுவது கிடையாது.  விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பற்றி பேசுவதுதான், தலீத் இலக்கியம். அது எந்த இன, மொழி, ஜாதி மக்களாய் இருந்தலும்.

                 தலீத் இலக்கியம் என்றாலே, ஒவ்வாமையுடன் பார்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். தலீத் இலக்கியம் என்று கூறிக்கொண்டு, உங்களை நீங்களே, ஏன் பிரித்துக்கொள்கிறீர்கள். என்று விதாண்டாவாதம் பேசுகிறவர்களும் உண்டு. தலீத் இலக்கியம் பற்றி சரியான புரிதல் இல்லாதவர்களே, அது வேறு ஏதோ என்று ஒதுக்கிவிடுகின்றார்கள்.

               தலீத் இலக்கியம் என்றாலே, ஆதிக்க ஜாதியினரையும், பார்ப்பனர்களையும் சாடுவது. என்று என்னிக்கொண்டு, தவிர்ப்பவர்களும் உண்டு. ஆனால் உண்மையில், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை முறை, சடங்குகள், வழிபாட்டு முறை, குடும்ப அமைப்புகள், துக்கம், சந்தோசம், காதல், காமம், திருமனம் என்று அவர்களைப் பற்றிய புரிதலை பெறவும் தலீத் இலக்கியத்தின் தேவை இருக்கிறது.

             ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட இனத்தில் பிறந்துவிட்ட, ஒரே காரணத்திற்காக ஒருவரை ஒதுக்குவதும், இழிவுபடுத்துவதும், புறக்கணிப்பதும், எப்படி சரியாக இருக்க முடியும். தான் எதற்காக புறக்கணிக்கப்படுகிறோம் என்று கூட தெரியாத அவல நிலை, தலீத் குழந்தைகள் மட்டும் சந்திக்க கூடிய மிக நுட்பமான பிரச்சனை. சமுகத்தில் அவர்கள் சந்திக்கும், பல சிக்கல்கலுக்குள் இருக்கும் உளவியல். இந்தியாவில் இன்னும் 80 சதவீதத்திற்கும் அதிகமான தலீத்கள், வறுமைகோட்டிற்கு கீழே, இருப்பதற்கு பின்னால் உள்ள அரசியல் இவற்றைப் பற்றி புரிதல் எற்பட தலீத் இலக்கியத்தின் அவசியம் உள்ளது.

அழகிய பெரியவன்
             தலீத் இலக்கியப் படைப்பாளிகளில், அழகிய பெரியவன் ஒரு குறிப்பிடத்தகுந்த படைப்பாளி. இவர் வேலூர் மாவட்டம், மேற்கு தொடர், பேர்ணாம்பட்டை சேர்ந்தவர். இயற்பெயர் அரவிந்தன். சுமார் 8 ஆண்டுகள் தொண்டு நிறுவனத்தில் பனிபுரிந்துவிட்டு. தற்போது பள்ளி ஆசிரியராக பனிப்புரிந்து வருகிறார்.

         1989 முதல் எழுதி வருகிறார்.  நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் இயங்குகிறார். தெளிந்த அரசியலோடு, தலித் மக்களின் பிரச்சினைகளை எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவராக விளங்குகிறார். அழகிய பெரியவன் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார். ‘தகப்பன் கொடி’  நாவலுக்காக 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றவர்.

             தலித்துகளின் சமூகப் பிரச்சினை, வலிகள், போராட்டங்கள், உட்சாதி முரண்கள், தலித்பெண்களின் நிலை, மனித அக உணர்வுகள் முதலானவை அழகிய பெரியவனின் கதைக் களங்கள். வேலூர் மாவட்ட நிலபரப்பு, சேரிகள், மனிதர்கள், அங்கு அதிகமாக இருக்கும் விவசாயம், பீடி சுற்றுதல், தோல் பதனிடும் தொழில் என அழகிய பெரியவன் தன் சிறுகதைகளில் கையாண்டு இருக்கிறார். சேரிகளில் புழங்கும் இயல்பான பேச்சு மொழி, இவரின் கதைகள் முழுவதும் விரவிக்கிட்க்கின்றன.

      ”தீட்டு” என்ற அவரது சிறுகதை தொகுப்பை, கடந்த வாரம் படிந்தேன். தீட்டு, குறி என்ற இரண்டு குறு நாவலும், 14 சிறுகதைகளும் கொண்ட தொகுப்பு. அதில் தீட்டு, குறி இரண்டும் கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றவை.

அழகிய பெரியவன் சிறுகதைத் தொகுப்புகள்
  
தீட்டு, நெரிக்கட்டு, கிளியம்மாவின் இளஞ்சிவப்புக்காலை, அழகிய பெரியவன் கதைகள்