வெள்ளி, 18 செப்டம்பர், 2015

கண்ணீரை விதைக்கிறவன்

"கண்ணீரை விதைக்கிறவன், கெம்பீரமாய் அறுக்கிறான்"

இந்த வாரம் நூலகத்திலிருந்து நெய்வேலி பாரதிக்குமார் எழுதிய "பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்" என்ற சிறுகதை தொகுப்பை எடுத்து வந்தேன். முதல் கதையே என் மனதையும், கண்களையும் கலங்க வைத்துவிட்டது. மொத்த புத்தகத்தையும் படித்து முடிக்கும் முன் எத்தனை முறை அழுதேன் என்றே தெரியவில்லை. சில இரவுகள் தூக்கத்தில் கூட பாரதிகுமாரின் கதாபாத்திரங்களே வந்துபோயின.

தினமும் நம்மைச் சுற்றி எத்தனையோ விடயங்கள் நடக்கின்றன. கொலை, கொள்ளை, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, இனப்படுங்கொலை, உடல் மற்றும் மனரீதியாக மனிதர்கள் சித்ரவதை செய்யப்படுவது என்று நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாமக்கு நடக்காதவரை அவை வெறும் செய்திகள். சிறிய எதிர்வினை கூட ஆற்றுவதுயில்லை.

பிறர் துன்பங்களை தன்னுடையதுப் போல் பாவிக்கும் ஒரு மனிதனால்தான், காலவெளியை கடந்தும் நிலைத்து நிற்கும் படைப்புகளை படைக்க முடியும். அப்படியான ஒரு ஆக சிறந்த படைப்புதான் "பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்".

அனைத்து கதைகளுமே அருமையாக உள்ளது. ஒரு கதைக்கூட புனைவு என்று எண்ணத் தோன்றவில்லை. எல்லாமே நிஜ சம்பவங்களை அப்படியே எழுதியது போன்றே இருந்தது. மிக எதார்தமான சிறுகதைகள்.  முன்னுரையில் எழுதி இருப்பதைப் போன்றே, எனக்கும் "பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்" படிக்கும் போது பாரதி ஒரு கிருத்துவராக இருப்பாரோ என்று தோன்றியது. "பிராது" படித்த போது இந்து மடங்களில் அதிகம்  இருந்தாரோ என்று தோன்றியது. " பாத்திமாவும் ஃபவுண்டன் பேனாவும்" படித்த பிறகு அவர் ஒரு இஸ்லாமியர் என்றே நினைத்துக் கொண்டேன்.

 நான் அதிகம் ரசித்த சிறுகதைகள்  பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள், பிராது, அய்யனார் உறக்கப் பாட்டு, ஆடிஸம், பிடிபட்டவன், இந்திய சோறு, உள் மன ஓசைகள், பாத்திமாவும் ஃபவுண்டன் பேனாவும்.

 நான் மிகவும் ரசித்த வரிகள்

"பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் " சிறுகதையில், கர்பாலாவில் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் 10 வயது சிறுமியின் தாய் சபித்தப்படி கூறுவாள், "எந்த பேரழிவைத் தந்துவிடும் அந்தக் கைகள் இருந்திருந்தால் என்று அவற்றைக் குண்டுகளுக்கு இரையாக்கினார்கள்." 

"அய்யனார் உறக்கப் பாட்டு" சிறுகதையில் அழகம்மையும், வேலாயிக் கிழவியும் பேசுகையில், அழகம்மை,"கல்யாணம் ஆகலைனா அய்யனாருதான் தொன, அவரையே கட்டிகிட்டதா நெனச்சி அப்படியே கெடக்கேன்"

கிழவி, " அடி செருப்பால, நீ கெட்ட கேட்டுகு அய்யனாரு கேக்குதா? ஆக்கங்கெட்ட மூத்... நீ பேசலடி நீ தின்ற பன்னிக் கொளுப்பு பேசுது... போ... போ...  தண்ணி மொண்டுகிட்டு பன்னி மேய்க்கப் போ... அதா ஒனக்கு கெதி"

அழகம்மை, "ஆண்டாலு ஆசபட்டா நியாயம், இந்த அழகம்ம ஆசபட்டா குத்தமா?

சுவரில் எழுதாதீர்கள் கதையில்,

குருடர்கள் பார்கிறார்கள்... செவிடர்கள் கேட்கிறார்கள்...

"என்னோடு சிறு பிராயத்தில் இருந்த ஊனமுற்ற சகோதரர்கள் இருக்கும் இல்லத்திலோ, மருத்துவமனைகளிலோ அற்புதங்கள் நிகழ்த்தாமல், அரசியல் தலைவர்கள் கூட்டங்கள் நடத்தும் திடல்களில் ஏன் நிகழ்த்துகிறார்கள் என்ற கேள்வி உங்களைப் போல் எனக்கும் உண்டு".

பாரதிக் குமார் கெம்பீரமாகவே அறுவடை செய்திருக்கிறார்...


செவ்வாய், 15 செப்டம்பர், 2015

இயற்கை ஆர்வலன்

நீங்கள் இயற்கையை நேசிப்பவரா? நிச்சயமாக, நீங்கள் வேலை இல்லாதவர், உபயோகமான விடயங்கள் எதுவும் செய்யாதவர், பேசியே கழுத்தை அறுப்பவர் என்று இந்த சமுகத்தால் எண்ணப்ப்டுவீர்.



உலகம் முழுவதுமே இயற்கை ஆர்வலர்கள் கேலிக்குள்ளாக்கப்படுகிறர்கள்.
நம் நாட்டில் சற்று அதிகமாகவே உள்ளது. இன்று ஆர்வலர்களின் நிலை எவ்வளவோ பரவாயில்லை.10 வருடங்களுக்கு முன்பு இன்னும் மோசமாக இருந்தது.

நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது, எங்களுக்கு தாவரவியல் பாடத்தை மேக நாதன் என்ற ஆசிரியர் எடுத்தார். அவர் இயாற்கை ஆர்வலரும் கூட. பாடத்தை வகுப்பில் மட்டும் நடத்தாமல், வெளியே அழைத்துச் சென்று பல புதிய தாவரங்களை அறிமுகம் செய்துவைத்தார்.

எங்கள் பள்ளியில் தினமும் காலை வழிபாட்டில், தினம் ஒரு ஆசிரியர் மாணாக்கர்க்கு   தேவையான அறிவுரைகளை வழங்குவர். தாவரவியல் ஆசிரியர் முறை வந்தபோது இயற்கையின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாப்பதின் அவசியங்கள் குறித்து பேசினார். மிகச் சிலரை தவிர பெரும்பான்மையானவர்கள் அவரை கேலி செய்தனர். என்னை மிகவும் வருந்த செய்தது, ஆசிரியர்களே அவரை பின்னால் நின்று கேலி செய்தது.

மற்ற கல்வியுடன், சூழ் நிலையியல் குறித்த கல்வியையும் நம் பிள்ளைகளுக்கு, கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனக்கு தெரிந்து, சூழ் நிலையியல் முக்கியமான கேள்விகள் கேட்கப்படாத, ஒதுக்கப்பட்ட பாடமாகவே அவை உள்ளது. தேர்வுகளுக்காக அல்லாமல், தேவைகாக சூழ் நிலையியல் குறித்த கல்வி அவசியம்.

இயற்கை குறித்த புரிதலை நம் பிள்ளைகளுக்கு, அளிக்க தவறினால் எதிர்காலத் தலைமுறை காற்றைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள்.

 நீங்களே முடிவெடுங்கள் நம் வருங்கால தலைமுறைக்கு நாய், பூனை, புலி, சிங்கம், பூச்சிகள், மரம், செடி, கொடிகளை நேரடியாக காட்டப் போகிறோமா? அல்லது கைப்பேசியிளா?