வெள்ளி, 18 செப்டம்பர், 2026

கன்னிமார் சாமி - சுஜாதா செல்வராஜ்

 


எழுத்தாளர் அனுராதா ஆனந்த் அவர்களின் நேர்காணல் ஒன்றில், பெண்களை பற்றி பெண் பார்வையில் அதிகம் எழுதப்படுவது இல்லை என்றார். ஏனெனில் பெண் எழுத்து, எப்போதும் தணிக்கை செய்யப்பட்டே வருகிறது. சில சமயங்களில், பெண்களே சுய தணிக்கை செய்துகொள்கிறார்கள். அவர்கள் நினைத்ததை அப்படியே எழுத முடிவது இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் சுஜாதா செல்வராஜ் அவைகளின் எழுத்து, அதிகம் சுயதணிக்கை செய்யப்படாத எழுத்து என்றே எனக்கு தோன்றியது.

சுஜாதாவின் மொழி மிக எளிய, மனதுக்கு மிக நெருக்கமான ஒரு மொழி. குறைவான சொற்களில் நீண்ட காலங்களை சுருக்கிவிடுகிறார். சங்கு சிறுகதையில், கதாநாயகிக்கும் (அவளுக்கு கதையில் பெயர் இல்லை) சத்ருவுக்கும் இடையேயான உறவு எப்படி ஆரம்பித்து , வளர்ந்து கூடல் நிகழும் நிலைக்கு வந்தது என்பதை வெறும் 2 பத்திகளில் எழுதி சென்றுவிடுவார். இதுபோல நிறைய இடங்களை சொல்லலாம். ஒரே வரிகளில் பெரிய உணர்வை கடத்தி விடுகிறார். சலனம் கதையின் முடிவில், 

“மீண்டும் லதா தன் மனக்கதவுகளை இறுக மூடிக்கொண்டு விட்டாள். மூடிய கதவுகளுக்கு முன் நான் நின்றிருக்கிறேன். ஏன் இப்படி நடந்தது? இது நடந்திருக்கக் கூடாது. ஒரு பெரும் நம்பிக்கையைத் தற்செயல்போல் நான் உடைத்திருக்கிறேன். கடைசியாக அவள் எனக்கொரு வாய்ப்பு கொடுத்தாள். நேருக்கு நேர் கண் பார்த்துச் சொல்ல ஒரு உண்மை. ஒரு ஒப்புதல். அங்கும் நான் என்னை ஒளித்துக்கொண்டேன். கடைசி வாய்ப்பையும் தவற விட்டேன். தாங்க முடியாத வலி ஒன்று நெஞ்சை அழுத்திப் பிடித்தது.”

இந்த வரிகளில் கதையின் மொத்த உணர்வையும் சொல்லிவிடுகிறார். அதேபோல அவரின் வட்டார மொழி பயன்பாடு சிறப்பாக உள்ளது. 

கதை நிகழும் காலம் எங்கும் நேரடியாக சொல்லாவிட்டாலும். நாம் படிக்கும்போதே அது எந்த காலம் என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம். கன்னிமார் சாமி கதையில், ராசு ராணுவத்தில் இருந்து ஓடி வந்ததால், அவனை தேடி இரண்டு வெள்ளையர்கள் வந்தார்கள் என்னும் போதே, அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் என்பது நமக்கு தெரிகிறது. வாட்ஸ்அப் , ஆண்ட்ராய்டு போன் கதையில் வந்தால் அவை நவீனக் காலம். 

பெரும்பாலான கதைகள் கிராமத்தில் நடப்பவையாக உள்ளது. நகரத்தில் நடக்கும் கதைகளைக்கூட நாம் படிக்கும்போது, கிராம பின்னணிதான் மனதில் ஓடுகிறது. கதை முடித்த பிறகுதான், நமக்கு இது நகரத்தில் நடக்கும் கதை என்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு கிராமம் குறித்த அவரின் விவரிப்புகள் இருந்தது.

வசந்தி கதை குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குறித்த கதை. எப்போதும் போல இந்த கதையிலும், நன்கு தெரிந்த ராசு அண்ணன்தான் அந்த கொடூரத்தை நிகழ்துகிறான். ஒரு வேளை அந்த சிறுமி தனக்கு நிகழ்ந்ததை வெளியே சொன்னாலும்.. அவளைத்தான் குற்றம் சொல்லும். குட்டை பாவாடை அணிந்தால் என்று. கடைசியாக வரும் வண்டிக்காரன் கூட கண்டும் காணாமல் இருந்து விடுகிறான். அவன் இந்த சமுதாயத்தின் பிரதிபலிப்பு.

நந்தினியின் அப்பா கதை குடிகார அப்பாவால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் ஒரு சிறுமி பற்றியது. அப்பா குடித்துவிட்டு இவள் படிக்கும் பள்ளிக்கு வரும் போது, அவமானத்தால் கூனி குறுக்கி போகிறாள். அந்த அவமானங்கள் தான் அவள் அப்பாவை கன்னத்தில் அறையும் அளவுக்கு அவளுக்கு கோவத்தை கொடுத்தது. 

பெரும்பான்மையான கதைகளில் குடிகாரர்கள் வருகிறார்கள். வார கணக்கில், தொடர்த்து குடிக்கிறார்கள். மனைவியை அடிக்கிறார்கள், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுக்கிறார்கள். குடி எப்போதும் குடியை கெடுக்கும்.

சிறு அனைப்புக்காக ஏங்கும் ஒரு மனைவி. தனக்கு Pedicure செய்த பெண்ணை அனைத்து ஆறுதல் அடைகிறாள். படுத்த படுக்கையாய் கிடக்கும் தன் அப்பாவின் அடிவயிற்றுக்கு கீழேயுள்ள முடியை அனே ஃப்ரெஷ் கிரீம் போட்டு எடுக்கும் ஒரு மகள். 

நடக்க முடியாமல் இருக்கும் தன் கணவனுக்கும் சேர்த்து, சந்தன கட்டைகளை விறகுகளுக்குள் வைத்து மலை வழியாக கடத்தி வந்து அந்த காசில் குடும்பத்தை தங்கும் வடிவு. அவன் அவளின் நடத்தையை சந்தேகப்பட்டு திட்டியபோதுக்கூட கோவப்படாதவள், மனங்கெட்ட சோறு என்று குப்பையில் வீசியதும் காளி ஆக மறைவிடுகிறாள். 

தோழியின் கணவன் மீது crush கொள்ளும் ரம்யா, ஒரு ஆண் எந்த வயதிலும் பெண்ணை ரசிக்கலாம், அதையே ஒரு பெண் செய்யும்போது, அவளை இந்த சமுதாயம் பார்க்கும் பார்வை வேறு. சலனம் கதையில் லதாவின் கணவனுக்கும் ரம்யாவிற்கும், நட்பிற்கும் காதலுக்கும் இடையே ஒரு உணர்வு. அதை ரொம்பவும் அழகாக சொல்லி இருந்தார் சுஜாதா.

இப்படி பேதை முதல் பேரிளம் பெண்கள் வரை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பேசுகின்றது இந்த தொகுப்பு.

இதில் எனக்கு குறையாக இரண்டு விசயங்கள் தெரிந்தன.

விக்ரமன் படம் போல, எல்லா கதைகளும் ஒரே மாதிரி இருக்கிறது. அவருக்கு நன்கு தெரிந்த தளத்தில் எழுதியிருக்கிறார். தன்னுடைய comfort zone குல் எழுதி இருக்கிறார். அதை விட்டு வெளியே வந்து எழுதினால் இன்னும் சிறப்பான கதைகளை எழுதலாம்.

இன்னும் கூட கொஞ்சம் காத்திரமாக எழுதி இருக்கலாம். நேரடியாக பாதிக்கப்பட்டவரை அழவைக்கும். ஆனால், நேரடியாக பாதிக்கப்படாதவர், ஆண்கள் என்று யாரையும் இது சஞ்சல படுத்தாது . அவர்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்காது.

மிக சிறப்பான மொழியை தன் வசம் ஆக்கியிருக்கிறார் சுஜாதா, அதை கொண்டு இன்னும் காத்திரமான படைப்புகளை குடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.






செவ்வாய், 26 செப்டம்பர், 2023

சில கிறுக்கல்கள்

எத்தனை முறை அவளை நேரில் பார்த்தாலும்,

ஒவ்வொரு முறையும் 

ஒரு டீன் - ஏஜ் பையனைப் போல மனம் படபடக்க ஆரம்பித்துவிடுகிறது.
______________________________________________


அவள் உறங்கிவிட்டாள் என்று நிச்சயமாக தெரிந்தப்பின்பும்,

ஒவ்வொரு பீப் ஒலிக்கும் என் கைப்பேசியை பார்த்துக்கொண்டிருக்கிறேன், இரவு முழுவதும்.

______________________________________________

சுய வன்முறை

முன்னாள் காதலி,
அவளின் காதலனைப் பற்றி சொல்லும் போது,

கோபப்படாமல் சிரித்து வைப்பது,
நம் மீது நாம் காட்டும் மிகப்பெரிய வன்முறை.
______________________________________________

இந்த பெண்ணும் அவளின் காதலும், இல்லாமல் இருந்திருந்தால் நான் 
மனிதனாக இருந்திருக்கமாட்டேன்.
______________________________________________

இந்த வாழ்க்கை விசித்திரமானது,

உண்மையாக காதலிக்கும் ஒரு பெண்ணையும் ,

உண்மையாக காதலிக்கும் ஒரு ஆணையும்,

வேறு வேறு நபர்களை காதலிக்க வைக்கிறது.


சனி, 26 ஆகஸ்ட், 2023

Life is beautiful

                நீண்ட இடைவெளிக்கு பின், இன்று தேவாலயத்துக்கு செல்லலாம் என்று தோன்றியது. அலுவகத்தில் கொஞ்சம் வேலைப்பளு ஞாயிற்றுகிழமை கூட அலுவலகம் செல்லவேண்டியதாகிவிட்டது. ஆலயத்திற்கு நான் சற்று காலதாமதமாக சென்றுவிட்டேன். வெளியில் படிக்கட்டுகளில் அமரவேண்டியதாகிவிட்டது.  உள்ளே புதிதாக ஒருவர் பிரசிங்கித்து கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் என் கவனம், வேறு ஒன்றில் சென்றுவிட்டது.

              இரண்டு நாட்களாக மழை பெய்ததால் என்னமோ, ஈசல்கள் பறக்க ஆரம்பித்தது, அந்த ஈசலை பிடித்து தின்ன, பறவைகள் அங்கு வர துவங்கின. தவிட்டு குருவி, இரட்டை வால் குருவி, இன்னும் பெயர் தெரியாத இரண்டு பறவைகள். கொஞ்ச நேரத்தில் காக்கைகளும் சேர்ந்துக்கொண்டது.

                 அந்த பறவைகள் பறந்து பறந்து ஈசல்களை பிடித்துக் கொண்டிருந்தன. அதில் இரட்டை வால் குருவிகள் ஈசலைப் பிடித்த விதம் ஆச்சர்யமாக இருந்தது. முதல் முறை இரட்டை வால் குருவியை இத்தனை அருகில் அதுவும் ஈசலை பிடிப்பதை பார்க்கிறேன். 

               எத்தனை வேகமாக பறந்து பிடித்தது, எந்த கோணத்தில் ஈசல் இருந்தாலும் அதற்கேற்றார் போல் வளைந்து பறந்து சென்று பிடித்தது. சற்று நேரம் கவனித்ததில் அதன் வாலின் அமைப்புதான் அதன் சிறப்பு, அவற்றின் வடிவம், அமைப்பு, குருவி வேகமாகவும், லாவகமாகவும், எந்த திசை, எந்த கோணமாக இருந்தாலும் பறந்து செல்ல உதவுகிறது. அங்கிருந்த மற்ற பறவைகளிடம் அத்துனை வேகமில்லை. தனக்கு வசதியான தூரம், கோணத்திற்கு ஈசல் வரும்வரை காத்திருந்து பிடித்தன. இந்த காட்சிகள் எனக்கு சில வாழ்க்கை பாடங்களை கற்றுத் தந்தன.

         ஒரே ஒரு நாள் மட்டும் வாழும் ஈசல் எதோ ஒரு பறவையின் பசியாற்றிவிட்டு செல்கிறது. சில ஆண்டுகள் வாழும் நம்முடைய வாழ்க்கை எத்தனை அர்த்தமுள்ளதாய் இருக்கிறது. யாருக்கேனும் உபயோகமாக வாழ்ந்தோமா? ஒருவருடைய வாழ்விலாவது மாற்றத்தை ஏற்படுத்தினோமா? 

            பறந்து பறந்து ஈசலைப் பிடித்த பறவைகள் தங்கள் பசி தீர்ந்ததும், அங்கிருந்து சென்று விட்டது. அப்பொழுதும் ஈசல்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் புதிய பறவைகள் வரத்தொடங்கின. தன்னுடைய தேவைத் தீர்ந்ததும் பறவைகள் சென்றுவிட்டன. அவைகளுக்கு தெரியும், அது வேறு பறவைகளின் உணவு என்று.

         மனிதன் தன் பசி தீர்ந்தப் பிறகும், மேலும் இரையை பிடித்துக் கொண்டே இருக்கிறான். அது அடுத்தவரின் உணவு என்ற எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் திருடிக்கொண்டே இருக்கிறான். இந்த உலகம் எல்லோருக்குமானது. தன் சக மனிதனிடம் மட்டுமல்ல எல்லா உயிரினத்தினிடமும் திருடிக் கொள்கிறான்.

           நம்மைச்சுற்றி எப்பொழுதும் நிறைய அழகான விடயங்கள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. காலை சூரியன், மழை, பனி, தென்றல் காற்று, குழந்தையின் சிரிப்பு, பறவைகளின் சப்தம், இன்னும் எத்தனையோ, அழகான விடயங்கள் நிகழ்ந்துக் கொண்டுதானிருக்கிறது. நாம் தான் தேவையில்லாதவற்றில் மூழ்கி பார்க்க தவறிவிட்டோம். கொஞ்சமேனும் தலை நிமிர்ந்து பாருங்கள்.

             உங்களை சுற்றியிருக்கும் இந்த அழகான உலகை ரசிக்க ஆரம்பித்தால், உங்கள் உலகமும் அழகாக மாற ஆரம்பிக்கும்.

"Life is always beautiful"

செவ்வாய், 3 நவம்பர், 2020

தமிழ் மழை


ஏன் அடைமழை என்கிறோம்?

அடைமழை = வினைத்தொகை!
*அடைத்த மழை
*அடைக்கின்ற மழை
*அடைக்கும் மழை
விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் 
அடைமழை!

கனமழை வேறு! அடைமழை வேறு!
தமிழில், 14 வகையான மழை உண்டு

1. மழை
2. மாரி
3. தூறல்
4. சாரல்
5. ஆலி
6. சோனை
7. பெயல்
8. புயல்
9. அடை (மழை)
10. கன (மழை)
11. ஆலங்கட்டி
12. ஆழிமழை
13. துளிமழை
14. வருள்மழை

வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!

மழ = தமிழில் உரிச்சொல்!
*மழ களிறு= இளமையான களிறு
*மழவர் = இளைஞர்கள்
அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே..
மழை எனும் சொல்! மழ + ஐ
இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை எ. காரணப் பெயர்!
மழை வேறு/ மாரி வேறு! 

*மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல!
*மாரி= சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!
மார்+இ= மாரி!
தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!
அதான் மாரி+அம்மன் எ. ஆதிகுடிப் பெண், தெய்வமானாள்!
தமிழ்மொழி, 
பிறமொழி போல் அல்ல! 
வாழ்வியல் மிக்கது!
அட்டகாசம்...!
இன்னும் கொஞ்சம்...
1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது
2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..
3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்…...
·சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)
சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்…..
அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.
சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்
சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்..மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்
4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை..
அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..
5. கனமழை - துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்
6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்).
7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..
8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..
மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது. 
(அதனால்தான் இலக்கியங்களில் ‘ மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.

-இளங்கோ ராமசாமி
Radio veritas asia tamil
Article link

Photo by Sourav Mishra from Pexels

வெள்ளி, 25 நவம்பர், 2016

பால்யக்கால நினைவுகள் 3 - ஈர்ப்பு



crush என்ற ஆங்கிலச்சொல்லிற்கு, தமிழில் ஈர்ப்பு என்றுக் கூறலாம். ஏறக்குறைய எல்லோருமே தம் சிறு வயதில் இப்படியான ஒரு ஈர்ப்பை கடந்துவந்திருப்பார்கள். பெரும்பாலும் ஆண்களுக்கு, தன்னைவிட பெரியப் பெண் மீதுதான் ஈர்ப்பு இருக்கும். அதன் பின் உள்ள மனோதத்துவத்தை புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், பிராய்டைதான் துணைக்கு அழைக்க வேண்டும். இந்த இடுக்கையில் அது வேண்டாமென்று நினைக்கிறேன்.

சிலருக்கு ஆசிரியை மீதும், சிலருக்கு தன் தெருவில் ஊரில் இருக்கும் அக்காகளின் மீதும், ஈர்ப்பு இருக்கும். இது பொதுவானது. 80 களில் சிறுவர்களுக்கு நடிகையின் மீது ஈர்ப்பு இருப்பது அரிதான விடயம். தொலைக்காட்சி இந்த அளவு வளர்ச்சியடையாத காலம். திரைப்படம் கூட எப்பொழுதாவதுதான் பார்க்கமுடியும். இந்த சூழ்நிலையில் நடிகை மீது ஈர்ப்பு எற்படுவது அரிது.

அந்த அரிய வகை விலங்கில் நானும் ஒருவன். என்னுடைய ஈர்ப்பு நடிகை காஞ்சனா. அப்பொழுது எனக்கு, 6 அல்லது 7 வயது இருக்கும். தூர்தர்ஸனில் ‘சாந்தி நிலையம்’ படம் போட்டிருந்தார்கள். (அப்பொழுதெல்லாம் ஞாயிற்றுகிழமை மட்டும்தான் சினிமா பார்க்க முடியும் அதனால் எந்த படமாக இருந்தாலும் பார்த்துவிடுவேன்) முதல் முறையாக காஞ்சனா அவர்களை பார்த்த நாள். ஆனால் அதன் பிறகு, பல வருடங்கள் கழித்துதான், காதலிக்க நேரமில்லை சினிமாவை பார்த்தேன்.(காஞ்சனாவின் முதல் படம்).

அடுத்தப் படத்தைப் பார்க்கும் பொழுது நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இப்படி நான் காஞ்சனாவின் பெரும்பான்மையான படங்களை, 25 வயதிற்கு மேல்தான் பார்த்தேன். இன்றுவரை கஞ்சனாமீதிருந்த ஈர்ப்பு சிறுதுக்கூட குறையவில்லை. இப்பொழுது தொலைகாட்சியில் காஞ்சனா நடித்த படங்களையோ, பாடல்களையோ ஒளிபரப்பினாலும் காஞ்சனாவை வைத்தக் கண் வாங்காமல், பார்த்துக்கொண்டிருப்பேன்.

திங்கள், 24 அக்டோபர், 2016

பால்யக் கால் நினைவுகள் - 2

 நன்பர்கள்

                             


என் பால்யக் காலத்தில் எனக்கு முதலில் கிடைத்தது, தோழிதான். என் சித்தியின் மகள்(அம்மாவின் தங்கை). நாங்கள் அம்மு என்று அழைப்போம். எனக்கு உடன் பிறந்த சகோதரிகள் இருவர் அவர்கள் பிறப்பதற்கு 3 வருடங்க்ளுக்கு முன்பே பிறந்துவிட்டதால், என் முதல் சகோதரியும், முதல் தோழியாகவும், அம்முவே ஆகிவிட்டார்.

                              என் அப்பாவின்  வேலை நிமித்தம் நான் என் ஆயா (அம்மாவின் அம்மா) வீட்டில் வளர்ந்தேன். என் சித்தியின் வீடும் பக்கத்துத் தெருவிலே இருந்ததால் நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தோம். ஒரே பள்ளி, என்னைவிட சிறியவள் என்பதால் வகுப்பு மட்டும் வேறு.

  எங்கள் வீட்டில் ஆண், பெண் பாகுபாடு காட்டாமல், வளர்த்தார்கள். பெண் குழந்தைகளுக்குதான் எங்கள் வீட்டில் எப்பொழுதும் முன்னுரிமை. அதனால் தான் நான் பெண் மீது ஆதிக்கம் செலுத்தாமல், அவர்களை சக மனிதியாக பார்க்க கற்றுக்கொண்டேன்.

                       
 இன்று நிறைய ஆண்கள் பெண்ணை அடக்கி ஆள நினைக்கும், ஆணாதிக்க மனோபாவம் அவன் குடும்பத்தில்தான் விதைக்கப்படுகிறது. அதை இந்த சமுகம், ஊடகம், சினிமா வளர்த்தெடுக்கிறது.

                           மற்றபடி, பள்ளியில் 2 தோழிகள். நான்காம் வகுப்புவரை இதுதான் என் நட்பு வட்டம். பிறகு, என் அப்பாவிற்கு என் சொந்த ஊரான ஆரணிக்கே மாற்றல் ஆனதால், நானும், ஆரணி வந்துவிட்டேன்.


                        6 வகுப்பு படிக்கும் போதுதான், என் பள்ளிக்கால நன்பர்கள் அறிமுகமானார்கள். இளையராஜா, மோகன், ராஜ ராஜன் என் நெருங்கிய நன்பர்கள். 7 ஆம் வகுப்பில் வினோத் எங்களுடன் சேர்ந்தான். 8 ல் யுவராஜ்.

                   10 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். 11,12 ஆம் வகுப்புகளை நான் வேறுப் பள்ளியில் படித்தேன். அங்கு வேறு புதிய நன்பர்கள். ஆனந்த், பூபதி, செந்தில், புவனேஸ்வர், கோடீஸ்வரன், ராஜேஸ் என் பெரிய நன்பர்கள் வட்டமே இருந்தது. இன்று எவறுமே தொடர்பில் இல்லை. வினோத், யுவராஜ் மட்டும் இன்றுவரை தொடர்பில் இருக்கிறார்கள்.

பால்யக் கால நினைவுகள் - 1



 நான் படிக்கும் புத்தகம், நான் பார்க்கும் திரைப்படம், நன்பர்களுடனான உரையாடல் என, என் பாலியக் காலத்தை எப்பொழுதும் நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கும். நினைத்து மகிழவும், பேசிக் களிக்கவும் நிறைய நினைவுகளைக் கொண்டது என் பால்யக்காலம்.

இன்றையத் தலைமுறையில் பெரும்பான்மையானவர்களுக்கு, தன் முதிர்வயதிலோ, நடுத்தர வயதிலோ, எண்ணிப் பார்க்க அப்படி ஒன்றும் சுவாரசியமான நினைவுகள் இருக்காது என்றே நினைக்கிறேன். அவர்கள் உலகை கைப்பேசியும், தொலைக்காட்சியும் அடைத்துக் கொண்டிருக்கின்றது.

பத்து வருடங்களுக்கு முன்புவரைக் கூட, என் பால்யக்கால நிகழ்வுகள் நினைவில் இருந்தன். இப்பொழுது நிறைய மறந்துவிட்டது. சில மங்களாகத்தான் நினைவிருக்கிறது. வயது ஏற, ஏற பழைய நினைவுகள் மறந்துக் கொண்டே வருகின்றன.

ஊர் காசு



முதல் முதலில் என் சொந்த செலவிற்கு பணம் தரப்பட்டது, இன்றும் என் நினைவில் இருக்கின்றன. அதற்கு முன்பும் நிறைய முறை பணம் தரப்பட்டுள்ளது. “ஊர் காசு” என்றுக் கூறுவார்கள். விடுமுறையில் உறவினை வீடுகளுக்குச் செல்லும் போதும், அவைகள் நம் வீடுகளுக்கு வரும்பொழுதும், அந்த வீட்டு சிறார்களுக்கு பணம் தறுவார்கள், அதற்குதான் ஊர்காசு என்றுப் பெயர். அவைப் எப்பொழுதும் என் அப்பாவிடம்தான் போய் சேரும். அதனை செல்வு செய்யும் உரிமை எனக்கில்லை.

அப்பொழுது எனக்கு 7 வயது என்று நினைக்கிறேன். என் அம்மாவின் சித்தப்பா, எங்கள் ’சின்னத் தாத்தா’ 5 பைசா, 10 பைசாவாக சில சில்லரை நானயங்களை எனக்குத் தந்தார். அதுதான் எனக்காக, என் சொந்த செலவிற்காக கொடுக்கப்பட்ட முதல் பணம். அதை வைத்து என்ன வாங்கினேன் என்று நினைவில்லை. ஒரு வேளை தேன் மிட்டாய் ஆக இருக்கலாம். அப்பொழுது அதுதான் என் பிரியமான நொருவை.

என் சின்னத் தாத்தாவிடம் 1,2,3, பைசாக்களும் சில இருந்தன ஆனால் அரசாங்கம் அப்பொழுது அவைகள் செல்லாது என அறிவித்திருந்தன.