திங்கள், 30 நவம்பர், 2015

என் காதலி - கவிதை



அடிக்கடி கவிதை எழுதுகிறேன் என்று, எதையாவது கிறுக்குவது உண்டு. அப்படி  நான் எழுதியதில் ஒன்றை, இங்கே பதிவிடுகிறேன். இதைப் படித்துவிட்டு, உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். அதை வைத்துதான் நான் தொடர்ந்து கவிதை எழுதலாமா? வேண்டாமா? என்று தீர்மானிக்க வேண்டும்..



என் காதலி,
இந்த பிரபஞ்சத்திலேயே
மிகவும்
அழகானவள்

அவளைப் பிடிக்காதவர்களே
இல்லை
என்று
நிச்சயமாக கூறலாம்

என்னுடைய காதல்
தெரிந்தப்
பின்பும்
யாரும் எதிர்க்கவில்லை

எப்பொழுது என்னை
பார்க்க வந்தாலும்
முத்தமிட
மறக்கமாட்டாள்

என் முன்னால்
காதலிக்கு
அவளைக்
ரொம்பவே பிடிக்கும்

என் மனைவிகூட
பொறாமைக் கொள்வதில்லை
அவளுடன் நான்
கொஞ்சி விளையாடும் போது

என் நினைவு தெரிந்த
நாளிலிருந்தே
அவளை
எனக்கு தெரியும்

இந்த உலகத்தில்
நான்
உள்ளவரை
அவளைக் காதலிப்பேன்

நான் பிறக்கும்
முன்பிருந்தே
அவள்
இருக்கிறாள்

நான் இறந்த
பின்பும்
அவள்
இருப்பாள்

இன்னுமா தெரியவில்லை
அவளின்
பெயர்
“மழை”

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

கண்ணீரை விதைக்கிறவன்

"கண்ணீரை விதைக்கிறவன், கெம்பீரமாய் அறுக்கிறான்"

இந்த வாரம் நூலகத்திலிருந்து நெய்வேலி பாரதிக்குமார் எழுதிய "பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்" என்ற சிறுகதை தொகுப்பை எடுத்து வந்தேன். முதல் கதையே என் மனதையும், கண்களையும் கலங்க வைத்துவிட்டது. மொத்த புத்தகத்தையும் படித்து முடிக்கும் முன் எத்தனை முறை அழுதேன் என்றே தெரியவில்லை. சில இரவுகள் தூக்கத்தில் கூட பாரதிகுமாரின் கதாபாத்திரங்களே வந்துபோயின.

தினமும் நம்மைச் சுற்றி எத்தனையோ விடயங்கள் நடக்கின்றன. கொலை, கொள்ளை, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, இனப்படுங்கொலை, உடல் மற்றும் மனரீதியாக மனிதர்கள் சித்ரவதை செய்யப்படுவது என்று நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாமக்கு நடக்காதவரை அவை வெறும் செய்திகள். சிறிய எதிர்வினை கூட ஆற்றுவதுயில்லை.

பிறர் துன்பங்களை தன்னுடையதுப் போல் பாவிக்கும் ஒரு மனிதனால்தான், காலவெளியை கடந்தும் நிலைத்து நிற்கும் படைப்புகளை படைக்க முடியும். அப்படியான ஒரு ஆக சிறந்த படைப்புதான் "பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்".

அனைத்து கதைகளுமே அருமையாக உள்ளது. ஒரு கதைக்கூட புனைவு என்று எண்ணத் தோன்றவில்லை. எல்லாமே நிஜ சம்பவங்களை அப்படியே எழுதியது போன்றே இருந்தது. மிக எதார்தமான சிறுகதைகள்.  முன்னுரையில் எழுதி இருப்பதைப் போன்றே, எனக்கும் "பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்" படிக்கும் போது பாரதி ஒரு கிருத்துவராக இருப்பாரோ என்று தோன்றியது. "பிராது" படித்த போது இந்து மடங்களில் அதிகம்  இருந்தாரோ என்று தோன்றியது. " பாத்திமாவும் ஃபவுண்டன் பேனாவும்" படித்த பிறகு அவர் ஒரு இஸ்லாமியர் என்றே நினைத்துக் கொண்டேன்.

 நான் அதிகம் ரசித்த சிறுகதைகள்  பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள், பிராது, அய்யனார் உறக்கப் பாட்டு, ஆடிஸம், பிடிபட்டவன், இந்திய சோறு, உள் மன ஓசைகள், பாத்திமாவும் ஃபவுண்டன் பேனாவும்.

 நான் மிகவும் ரசித்த வரிகள்

"பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் " சிறுகதையில், கர்பாலாவில் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் 10 வயது சிறுமியின் தாய் சபித்தப்படி கூறுவாள், "எந்த பேரழிவைத் தந்துவிடும் அந்தக் கைகள் இருந்திருந்தால் என்று அவற்றைக் குண்டுகளுக்கு இரையாக்கினார்கள்." 

"அய்யனார் உறக்கப் பாட்டு" சிறுகதையில் அழகம்மையும், வேலாயிக் கிழவியும் பேசுகையில், அழகம்மை,"கல்யாணம் ஆகலைனா அய்யனாருதான் தொன, அவரையே கட்டிகிட்டதா நெனச்சி அப்படியே கெடக்கேன்"

கிழவி, " அடி செருப்பால, நீ கெட்ட கேட்டுகு அய்யனாரு கேக்குதா? ஆக்கங்கெட்ட மூத்... நீ பேசலடி நீ தின்ற பன்னிக் கொளுப்பு பேசுது... போ... போ...  தண்ணி மொண்டுகிட்டு பன்னி மேய்க்கப் போ... அதா ஒனக்கு கெதி"

அழகம்மை, "ஆண்டாலு ஆசபட்டா நியாயம், இந்த அழகம்ம ஆசபட்டா குத்தமா?

சுவரில் எழுதாதீர்கள் கதையில்,

குருடர்கள் பார்கிறார்கள்... செவிடர்கள் கேட்கிறார்கள்...

"என்னோடு சிறு பிராயத்தில் இருந்த ஊனமுற்ற சகோதரர்கள் இருக்கும் இல்லத்திலோ, மருத்துவமனைகளிலோ அற்புதங்கள் நிகழ்த்தாமல், அரசியல் தலைவர்கள் கூட்டங்கள் நடத்தும் திடல்களில் ஏன் நிகழ்த்துகிறார்கள் என்ற கேள்வி உங்களைப் போல் எனக்கும் உண்டு".

பாரதிக் குமார் கெம்பீரமாகவே அறுவடை செய்திருக்கிறார்...


செவ்வாய், 15 செப்டம்பர், 2015

இயற்கை ஆர்வலன்

நீங்கள் இயற்கையை நேசிப்பவரா? நிச்சயமாக, நீங்கள் வேலை இல்லாதவர், உபயோகமான விடயங்கள் எதுவும் செய்யாதவர், பேசியே கழுத்தை அறுப்பவர் என்று இந்த சமுகத்தால் எண்ணப்ப்டுவீர்.



உலகம் முழுவதுமே இயற்கை ஆர்வலர்கள் கேலிக்குள்ளாக்கப்படுகிறர்கள்.
நம் நாட்டில் சற்று அதிகமாகவே உள்ளது. இன்று ஆர்வலர்களின் நிலை எவ்வளவோ பரவாயில்லை.10 வருடங்களுக்கு முன்பு இன்னும் மோசமாக இருந்தது.

நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது, எங்களுக்கு தாவரவியல் பாடத்தை மேக நாதன் என்ற ஆசிரியர் எடுத்தார். அவர் இயாற்கை ஆர்வலரும் கூட. பாடத்தை வகுப்பில் மட்டும் நடத்தாமல், வெளியே அழைத்துச் சென்று பல புதிய தாவரங்களை அறிமுகம் செய்துவைத்தார்.

எங்கள் பள்ளியில் தினமும் காலை வழிபாட்டில், தினம் ஒரு ஆசிரியர் மாணாக்கர்க்கு   தேவையான அறிவுரைகளை வழங்குவர். தாவரவியல் ஆசிரியர் முறை வந்தபோது இயற்கையின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாப்பதின் அவசியங்கள் குறித்து பேசினார். மிகச் சிலரை தவிர பெரும்பான்மையானவர்கள் அவரை கேலி செய்தனர். என்னை மிகவும் வருந்த செய்தது, ஆசிரியர்களே அவரை பின்னால் நின்று கேலி செய்தது.

மற்ற கல்வியுடன், சூழ் நிலையியல் குறித்த கல்வியையும் நம் பிள்ளைகளுக்கு, கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனக்கு தெரிந்து, சூழ் நிலையியல் முக்கியமான கேள்விகள் கேட்கப்படாத, ஒதுக்கப்பட்ட பாடமாகவே அவை உள்ளது. தேர்வுகளுக்காக அல்லாமல், தேவைகாக சூழ் நிலையியல் குறித்த கல்வி அவசியம்.

இயற்கை குறித்த புரிதலை நம் பிள்ளைகளுக்கு, அளிக்க தவறினால் எதிர்காலத் தலைமுறை காற்றைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள்.

 நீங்களே முடிவெடுங்கள் நம் வருங்கால தலைமுறைக்கு நாய், பூனை, புலி, சிங்கம், பூச்சிகள், மரம், செடி, கொடிகளை நேரடியாக காட்டப் போகிறோமா? அல்லது கைப்பேசியிளா?




ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

சென்னை கதைகள்

சென்ற வாரம் நூலகத்தில், சென்னை சிறுகதைகள் என்ற புத்தகத்தைப் பார்த்தேன். முதல்முறையாக சென்னையைப் பற்றிய ஒரு சிறுகதை தொகுப்பை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. பல முக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்று இருந்தன. சென்னையின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை, மொழி, உணவு, வெயில் என எல்லா தளங்களையும் தொட்டு இருந்தது. எல்லா சிறுகதைகளும் சிறப்பாகவே இருந்தது. 

என்னை மிகவும் பாதித்தது, ஜெயகாந்தன் எழுதிய "தாம்பத்தியம்" என்ற சிறுகதை. நடைப்பாதையில் குடியிருக்கும், காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளிக்கும், சித்தாள் வேலைச் செய்யும் பெண்ணுக்கும் திருமனம் நடைபெறுகிறது. இவர்களுக்குள் நடைபெறும் தாம்பத்தியம், இந்த சமுதாயத்தால் எப்படி கேவலப்படுத்தப்படுகிறது என்பதுதான் கதை. எனக்கும் சென்னைக்கும் ஒரு 12 வருடப் பரிச்சயம் இருக்கும். ஒவ்வொருமுறை நடைபதையில் வாழ்பவர்களை பார்க்கும் போதும் எனக்குள் இந்த கேள்வி எழும். இவர்களுக்குள் எப்படி தாம்பத்தியம் நிகழ்ந்து, குழந்தைப் பெற்றார்கள் என்று. சென்னையின் பரபரப்பில், நாம் பல விடயங்களை கவனிப்பது இல்லை. நடைப்பாதையில் வாழும் பெரியவர்களைவிட, சிறார்களும் குழந்தைகளும்தான் என் கவலையை அதிகம் ஆக்குபவர்கள்.





 இன்று(ஏப்ரல் - 12) "வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்" சில தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் இனைந்து, "வீதியிலிருந்து பள்ளிக்கு" என்ற நிகழ்வின் மூலம் பல ஆயிரம் குழந்தைகளை, படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

https://www.youtube.com/watch?v=BCd3fmXQQy4 



இந்தியாவில் மட்டும் 11 மில்லியன் சிறார்கள் வீதியோரத்தில் இருக்கிறார்கள். ஒரு தனியார் நிறுவனம் இந்த அளவிக்கு செய்யும் போது, அரசாங்கம் நினைத்தால் இன்னும் அதிகம் செய்யலாம். நம் அருகிலும் இதுபோன்ற நிறைய சிறுவர்கள் உள்ளார்கள். அதில் ஒருவருடைய வாழ்கையை ஆவது மாற்ற முயற்சி செய்துதான் பார்போமே.....

ஞாயிறு, 22 மார்ச், 2015

சமோசா


 நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் பின்னால் ஆயிரம் கதைகள் ஒளிந்திருக்கும். சில சுவாரசியமாக இருக்கும், சில சோகமாக இருக்கும், சில மர்ம நாவல் போலக்கூட இருக்கும், ஏன் சில அசுவாரசியமாக கூட இருக்கும். ஆனால், நிச்சயம் கதை இருக்கும்.

என் அலுவலகம் இருக்கும் பகுதியில், மாலையில் சமோசா விற்கும் சிறுவர்களை பார்க்க முடியும்.அவர்களைப் பார்க்கும்போது, எனக்குள் சில கேள்விகள் எழுந்தன.
     
       யார் இந்த சிறுவர்கள்?
       இவர்கள் பள்ளிக்கு செல்வார்களா?
       எப்பொழுதும் சமோசாதான் விற்பார்களா?

என் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவே, அவர்களிடம் சமோசா வாங்க ஆரம்பித்தேன். எல்லோரும் காலையில் பள்ளிச் சென்றுவிட்டுதான் மாலையில் சமோசா விற்கிறார்கள் என்பது எனக்கு சற்று ஆறுதல் அளித்தது.
    எப்படியும் எல்லா சமோசாவையும் விற்றுவிட்டு, தன் முதலாளியிடம் கணக்கை ஒப்படைத்துவிட்டு வீடு செல்ல குறைந்தது இரவு 9 மணி ஆகிவிடும். 

ஆனால் இவர்கள் எப்பொழுது வீட்டுப்பாடங்களை செய்வார்கள்? ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை எப்பொழுது படிப்பார்கள்? எப்பொழுது விளையாடுவார்கள்?
காலை பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீதி வீதியாக அலைந்து சமோசா விற்றப் பின், களைப்பில் உறங்கத்தான் முடியும். எப்பொழுது படிப்பது? எப்பொழுது விளையடுவது?

இந்த வயதில் அனுபவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோசங்களைக் கூட அனுபவிக்க முடியாமல்,  இப்படி உழைக்க என்ன காரணம்? மிகச் சரியாக யூகித்தீர்கள்... வறுமை... இவர்களைப் பார்க்கும் போது, தியாகராய நகரில் ஜவுளிக்கடைகளில் வேலைச் செய்யும் பெண்கள்தான் நினைவுக்கு வந்தார்கள்.

ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தப் போது, அவர்களில் ஒரு சிறுவன் கலக்கத்துடன் நின்றுக்கொண்டு இருந்தான்.
அவனிடம் 10ரூபாய்க்கு சமோசா வங்கிக் கொண்டு விசாரித்தேன். யாரோ ஒரு சிறுவன் 2 சமோசாக்களை திருடிக்கொண்டு ஓடிவிட்டதாக கூறினான். "5 ரூபாய் போச்சுண்ணா" என்று அவன் கூறியப் போது, எனக்கு மனம் கலங்கிவிட்டது. அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
வந்தப் பிறகு, யேசித்தேன் ஆறுதல் கூறியதற்க்கு பதிலாக, ஒரு 5 ரூபாய் கொடுத்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பானே என்று தோன்றியது.

மறு நாள் அந்த சிறுவனைப் பார்த்தேன் நேற்று நடந்ததை மறந்துவிட்டு, சமோசா விற்றுக்கொண்டு இருந்தான். இன்னும் விழிப்பாக. நல்லவேளை அவனுக்கு 5 ரூபாய் கொடுக்கவில்லை. அப்படி செய்து இருந்தால், இதுப்போல் எப்பொழுது நடந்தலும், யாராவது இப்படி உதவுவார்கள் என்று எதிபார்த்து இருப்பான். ஆனால் இப்பொழுது, இனி இதுபோல் நடக்காமல் எப்படி இருப்பது என்று கற்றுக்கொண்டான்.

இவை இங்கு மட்டும் நடப்பவை அல்ல........ 

 இந்தியா முழுவதும் இவர்களைப் போல் பலர் இருக்கிறார்கள். இதற்க்கெல்லாம் தீர்வுதான் என்ன?

 அரசாங்கத்தை மட்டும் குரைச் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. நம் நாட்டின் எதிர்காலமாகிய இவர்களின் வாழ்க்கையை சீரமைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை...

ஞாயிறு, 1 மார்ச், 2015

பெண் சிங்கத்தின் இதயம்


நேற்று யூ டியுபில் "Heart of a lioness " என்ற ஆவணப்படத்தை பார்த்தேன். இயற்கை ஆர்வலரும் தொலைக்கட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான சாபா டக்ளஸ் ஆமில்ட்டன் இந்த படத்தை எடுத்துள்ளார். 42 நிமிடங்கள் ஒடும் இந்தப் படத்தை பற்றி இரவு வெகு நேரம் வரை யோசித்துகொண்டு இருந்தேன்.

கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள கென்யாவில் சம்புரு என்ற பகுதியில் உள்ள காட்டில் பரவி வரும் வதந்தியை பற்றி கேள்விப் பட்டு அங்கு வருகிறார் சாபா. ஒரு பெண் சிங்கம் ஆரிக்ஸ் குட்டியை தத்து எடுத்து உள்ளதாக கூறுகிறார்கள். அந்த சிங்கத்தின் பெயர் காமுன்யாக் (ஆசிர்வதிக்கப் பட்ட ஒன்று) ஆரிக்ஸ் என்பது ஒருவகையான மாண்.

வழித்தவறிப் போன குட்டியை உண்ணாமல், தத்து எடுத்து பாதுகாத்து வருகின்றது காமுன்யாக். அந்த குட்டி காமுன்யாகிடம் இருந்து விலகிச்செல்லும்போது, தன் குட்டிகளை அழைக்கும் போது ஏற்படுத்தும் ஒலிகளை எழுப்பி குட்டியை அழைத்தது.




திடீரென ஒரு ஆண் சிங்கம், குட்டியை அடித்து திண்றுவிடுகிறது. அதை தடுக்க முடியாமல் காமுன்யாக் திகைத்து நிற்கிறது. பின் அது நடந்துக் கொள்ளும் விதம், தாய் தன் குட்டியை இழந்துவிட்டு வேதனையில் துடிப்பதுப் போல் இருந்தது.

மறு நாள்,
         16 நாட்களுக்குபின், வேட்டையாடி தன் முதல் உணவை காமுன்யாக் உண்டது.

1 வருடத்திற்குப் பின்,
         5 ஆரிக்ஸ் குட்டிகளை தத்தெடுத்துக் கொண்டது. அதில் ஒன்று பசியால் இறந்துவிடுகிறது. மற்றவை தப்பி ஓடிவிட்டது. கடைசி ஒன்றை காமுன்யாக் கைவிட்டுவிட்டது. அது தன் தாயிடமே சேர்ந்துவிடும்.அதன் பின் காமுன்யாகை யாரும் பார்க்கவில்லை.

எந்த விலங்கும் தன் இனத்தை தானே அழித்ததாக எந்த வரலாறும் இல்லை. அடுத்த உயிரைக்கூட பசிக்காகதான் கொல்கிறது. "பிரிடேடர்" என்று அழைக்கப்படும் சிங்கம் ஆரிக்ஸ்  குட்டிகாக தன் இயல்பான குணம் வேட்டையாடுதலையே விட்டுவிட்டது. ஆனால் மனிதன் மட்டும் தன் சுய நலத்திற்காக, தன் இனத்தை தானே அழித்துக் கொண்டு இருக்கிறான். உலகத்தில் மிக கொடுரமான விலங்கு மனிதன்.

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய "விலங்கு பண்ணை" என்ற நாவலில் ஓல்டு மேஜர் என்ற வெள்ளை நிறப் பன்றி பேசும் ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்தது.

            "மனிதன் தான் நமக்கெல்லாம் உண்மையான ஒரே எதிரி. இப்போதுள்ள காட்சியிலிருந்து மனிதனை மட்டும் விலக்கிவிட்டுப் பாருங்கள், நம்முடைய மிகக் கடுமையான அதீத உழைப்புக்கும் கொடிய பசிக்கும் மூலக்காரணம் முழுவதுமாக ஒழிந்துவிடும்"

எட்டு பண்பாடுகளின் நாடு - 2


முந்தையப் பதிவில் எண்டோ சல்பானைப் பற்றி எழுதினேன். இந்த இரண்டாவது பதிவில் மற்ற விடயங்களைப் பற்றி பார்ப்போம்.

உண்மை சம்பவத்தை தழுவி இருந்தாலும், பிரசார நெடி சிறுதும் இல்லை. மிக செறிவாக, மிக அழகாக எழுதியுள்ளார். 36 வது அத்தியாயத்தில் ஜெயராஜன் கூட்டத்தில் ஆற்றும் உரை கூட சுவாரசியமாகவும் உள்ளது, நிறைய தகவல்களுடனும் உள்ளது.

 நீலகண்டன் - தேவயானி இருவருக்குமான காதல் என்னை மிகவும் நெகிழ வைத்தது. இப்படியான ஒரு அழகான, கண்ணியமான காதலை நான் எங்கும் கண்டதும் இல்லை, படித்ததும் இல்லை.

 நிறைய கதாபத்திரங்கள் வருகிறார்கள், எல்லோரும் நம் மனதில் பதிந்துவிடுகிறார்கள். குகை, வயதான கழுதை, சுக்ரீவன், நண்டு, நிலைக்கண்ணடி என்று மனிதர்களோடு சேர்ந்து இவைகளும் நம் மனதில் பதிந்துவிடுகிறது.

 நாவலின் முடிவில் நீலகன்டனும் தேவயானியும் குகையினுள் அடைகலம் புகும் காட்சி, விவிலியத்தில் நோவாவின் கதையை நினைவுப்படுத்தியது. நோவா கட்டும் பேழையில் அனைத்து உயிரினங்களிலும் ஒரு ஜோடி இருக்கும். பிரளயத்தால் கடவுள் உலகத்தை அழித்துப் போடும் மட்டும் உள்ளே பாதுகாப்பாக இருக்கும். இந் நாவலின் இறுதியிலும் குகையின் உள்ளே அனைத்து ஜீவராசிகளும் பிரளயம் முடியும் வரை, இவைகள் இங்கேதான் இருக்கும் என்று குகை கூறும். நீலகண்டனும் தேவயானியும் குகையினுள் காலடி எடுத்து வைக்கும் போது குகை பெரிய படகை போல் ஆடும்.

மற்றொரு இடத்தில் நீலகண்டனும், ஜெயராஜனும் ஏதோ சத்தம் கேட்டு வெளியே  வந்து பார்ப்பார்கள். ஜடாதாரி மலையில் சூறாவளி கடுமையாக வீசீக் கொண்டு இருக்கும். அது பார்ப்பதற்கு சிவனின் தாண்டவம் போல் இருக்கிறது என்பார்கள்.

இப்படி பல இடங்களில் இயற்கையை கடவுளுடன் ஒப்பிட்டு இருப்பார் அம்மிகாசுதன். எனக்கு அவர் இயற்கைதான் கடவுள் என்று கூறுகிறாரோ என்று தோன்றியது.

இயற்கைதான் உண்மையான கடவுள். இயற்கையை வணங்கி அதை பத்திரமாக பார்த்துக் கொண்டால், இயற்கை நமக்கு வேண்டிய வரத்தையும் கொடுத்து, நம்மையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்.